கோலாலம்பூர், ஏப்ரல் 28- இவ்வாண்டு தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2023, புத்ரா ஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் மே 1 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார். தொழிலாளர் தின கொண்டாட்டத்தை ஒற்றுமை அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு தொழிலாளர் தின விழா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னிலையில் கொண்டாடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விழாவில் பிரதமர் கலந்துகொள்வது அனைத்து தொழிலாளர்களுக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது தொழிலாளர்களின் மீது நாட்டின் உயர்ந்த தலைவர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும் என்றார். தொழிலாளர் தினக் கொண்டாட்ட விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொழிலாளர்கள் நலன்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்புகளை செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார். இன்று ஆர்.டி.எம். வானொலிக்கு வழங்கிய தொழிலாளர் தினச் சிறப்பு பேட்டியின் போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.