ஷா ஆலம், மே 10- மாநிலத்தில் நீரிழிவு நோயாளிகளின் தேவையை
ஈடுசெய்வதற்காக அடுத்தாண்டு தொடங்கி 15 டயாலிசிஸ் இரத்த
சுத்திகரிப்பு மையங்கள் செயல்படும் என்று மந்திரி புசார் கூறினார்.
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் ஏற்கனவே ஐந்து
டயாலிசிஸ் மையங்கள் இயங்கி வந்த வேளையில் கூடுதலாக
அத்தகைய10 மையங்களை அமைக்க மாநில அரசு இணக்கம்
தெரிவித்துள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இலவச டயாலிசிஸ்
சேவைத் திட்டத்தில் மேலும் 10 மையங்களை இணைப்பதன் மூலம்
அடுத்தாண்டில் இம்மையங்களின் எண்ணிக்கை 15ஆக உயரும் என்று
அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
ஐந்து டயாலிசிஸ் மையங்களுடன் கடந்த 2010ஆம் ஆண்டு முதல்
செயல்பட்டு வந்த புசாட் டயாலிசிஸ் ராக்யாட் என்றத் திட்டம் தற்போது
டயாலிசிஸ் மெஸ்ரா சிலாங்கூர் என்ற பெயரில் உருமாற்றம்
செய்யப்படுவதாக நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் முன்னதாக கூறியிருந்தார்.
புதிய டயாலிசிஸ் மையங்கள் கிள்ளான், அம்பாங், செலாயாங் போன்ற
பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு டயாலிசிஸ் மையத்திலும் மாதம் 200 பேர் வரை இரத்த
சுத்திகரிப்பு சேவையைப் பெற்று வருகின்றனர்.