NATIONAL

பி.கே.என்.எஸ். நோன்புப் பெருநாள் உபசரிப்பில் 2,000 பேர் பங்கேற்பு- மந்திரி புசார் சிறப்பு வருகை

ஷா ஆலம், மே 15- இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் இன்று
நடைபெற்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.என்.எஸ்.)
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை 11.00 மணி தொடங்கி நடைபெற்ற இந்த நிகழ்வில் மந்திரி  புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பிற்பகல் 12.30 மணியளவில் நிகழ்வுக்கு வந்த மந்திரி புசாரைப்
பி.கே.என்.எஸ். தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மாமுட்
அபாஸ் வரவேற்றார்.

வர்த்தக பங்காளிகளைக் கௌரவிக்கும் பொருட்டு இந்த பெருநாள்
உபசரிப்பைத் தாங்கள் ஆண்டு தோறும் நடத்தி வருவதாகப் பி.கே.என்.எஸ்.
நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு நிர்வாகி முகமது சோப்ரி
ஜைனால் அபிடின் கூறினார்.

இன்றைய இந்த நிகழ்வில் வர்த்தகப் பங்காளிகள், பி.கே.என்.எஸ். துணை
நிறுவன பணியாளர்கள், ஊராட்சி மன்ற மற்றும் ஊடக பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாகப் பி.கே.என்.எஸ்.சின் வர்த்தக
நடவடிக்கைகளுக்குப் பெரிதும் துணையாக இருக்கும் தரப்பினருடன்
உறவை தொடர்ந்து வலுப்படுத்திக் கொள்ள இயலும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங்
சாங் கிம் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங்
ஸீ ஹான் ஆகியோரும் இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :