கோத்தா கினாபாலு, ஜூன் 12: நேற்று இங்குள்ள கம்போங் தஞ்சோங் அரு லாமா எனும் கிராமத்தில் உள்ள கடலில் பாலினம் அடையாளம் காணப்படாத குழந்தையின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அக்கிராம மக்களால் மாலை 6.30 மணியளவில் அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. பின் காவல்துறையினருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் சடலம் கண்டெடுக்கப் பட்டதைப் பற்றிய புகாரைப் பெற்றதும், விசாரணைக்காக ஒரு காவல் துறையினர் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது எனச் கோத்தா கினாபாலு மாவட்டக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் கல்சோம் இட்ரிஸ் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில் அக்குழந்தை புதிதாகப் பிறந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
“சம்பந்தப்பட்ட குழந்தை பிறந்த பிறகு கடலில் வீசப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காகக் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு (HQE) அனுப்பப்பட்டதாக கல்சோம் கூறினார்.
இதுவரை குழந்தையின் பாலினம் கண்டறியப்படவில்லை என்றும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபரைக் கண்டறிவதற்காகத் தமது தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குற்றவியல் சட்டத்தின் 318ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கோத்தா கினாபாலு மாவட்டக் காவல்துறை தலைமையகம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.