NATIONAL

கழிப்பறையில் மயங்கி விழுந்து ஆடவர் மரணம்- செத்தியா ஆலமில் சம்பவம்

ஷா ஆலம், ஜூன் 12- செத்தியா ஆலமில் உள்ள வீடொன்றில் உட்புறமாகத்
தாழிடப்பட்டிருந்த கழிப்பறையில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட
55 வயது ஆடவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.

வீட்டின் கழிப்பறையில் இருந்த தன் கணவரிடமிருந்து எந்த பதிலும் வராத
நிலையில் அவரின் மனைவி இன்று விடியற்காலை 3.04 மணியளவில்
தங்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரியதாக சிலாங்கூர் மாநிலத்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி
இயக்குநர் முகமடுல் முகமது ஜைன் கூறினார்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோத்தா அங்கிரிக் தீயணைப்பு மற்றும்
மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய
குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த வீட்டில் தாழிடப்பட்ட கழிப்பறையில் ஆடவர் ஒருவர் மயங்கிய
நிலையில் கிடப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். சுகாதார அமைச்சின்
தரப்பினர் மேற்கொண்ட சோதனையில் அவர் உயிரிழந்து விட்டது உறுதி
செய்யப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.


Pengarang :