ஷா ஆலம், ஜூலை 2- விழாக்காலங்களில் அல்லது பழ பருவகாலங்களில் வியாபாரத்தில் ஈடுபட விரும்புவோருக்கு 20,000 வெள்ளி வரை வர்த்தக கடன் உதவி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஐ-பெர்மூஸிம் எனப்படும் இந்த திட்டத்திற்கு www.hjrahselangor.com எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும் என்பதோடு I-Bermusim என்ற இணைப்பின் மூலமாக இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களையும் பெற முடியும் என்று யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.
இந்த ஐ-பெர்மூஸிம் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூரில் உள்ள தொழில் முனைவோர் விழாக்காலங்களில் தற்காலிக அடிப்படையிலும் பழ பருவகாலங்களிலும் விற்பனை செய்வதற்கான மூலதனத்திற்கான நிதியை பெறுவதற்கான வாய்ப்பு பெறுவர் என்று ஹிஜ்ரா அறவாரியம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விழாக்கால விற்பனை கடன் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் வருமாறு-
• மலேசிய பிரஜையாக இருக்க வேண்டும்
• சிலாங்கூர் குடியிருப்பாளராக அல்லது நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். • 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
• ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவராக இருக்க வேண்டும்
• பிரத்தியேக வர்த்தக மையத்தை கொண்டிருக்க வேண்டும்
• செல்லத்தக்க வர்த்தக லைசென்ஸ்/ பெர்மிட் இருக்க வேண்டும்
• நிதி நிறுவனங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களிடம் பெற்ற கடனை முறையாக திரும்பச் செலுத்திய வர்களாக இருக்க வேண்டும்
• வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட்டவராக இருக்க வேண்டும்
• கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.
ஐ-பெர்மூஸிம் தவிர்த்து ஐ-பிசினஸ், ஹீரோ டூ ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி) கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி மற்றும் ஐ-அக்ரோ ஆகிய வர்த்தக கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.