EL

மேம்பாட்டிற்கான முயற்சிகள் ஏதுமின்றி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தும் தலைவர்களை நிராகரியுங்கள்- அமிருடின் கோரிக்கை

கோம்பாக், ஜூலை 10- மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணித்து விட்டு அரசியலில் மட்டும் எந்நேரமும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை கோம்பாக் தொகுதி மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த அரசியல்வாதிகள் யார் என்பதை தனது உரையில் குறிப்பிடாதச் சிலாங்கூர் மாநிலப் பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர், கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மாநிலத்தை மீட்பதற்கு ஏதுவாக கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிர்வாகம் தொடர்ந்து மாநிலத்தை வழி நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் கடுமையாக முயன்று வருகின்றனர். இன்று நாம் வென்றால் நாளை பிரதமர் பதவி விலகி விடுவார் என அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் சட்டமன்ற தேர்தலுக்கும் நாடாளுமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மேலும் சொன்னார்.

இதை விட நல்லது செய்வதற்கு உங்களிடம் வேறு எதுவும் இல்லையா? ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பிரதமரை, அரசாங்கத்தை மாற்றினால் குழப்பமும் நிச்சயமற்ற சூழலும் தான் ஏற்படும். பிரதமரை மாற்றுவதில் மட்டுமே நாடு கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் என்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்றதாக உள்ளது. அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வரும் தேர்தலில் சிலாங்கூரைக் கைப்பற்றி மாநிலத்தின் நிதியை அரசியல் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

அரசியலைத் தவிர மாநிலத்தின் மேம்பாடு மீது அவர்களுக்கு துளியும் அக்கறை கிடையாது. ஆகவே நாம் சிலாங்கூரை தற்காத்தாக வேண்டும் என அவர் நேற்று சுங்கை துவா தொகுதியின் தேர்தல் இயந்திரத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.


Pengarang :