NATIONAL

கட்டிடத்தில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர்

ஈப்போ, அக் 2: ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் மெங்லெம்பு ஆகிய இடங்களில் நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கட்டிடத்தில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா ஹோட்டலில் நடந்த ஒரு சம்பவத்தில், தாமான் நேஷனலைச் சேர்ந்த 40 வயது நபர், 13வது மாடியில் இருந்து விழுந்து ஆறாவது மாடியின் கூரையில் மாட்டிக்கொண்ட தாகச் சந்தேகிக்கப்படுகிறது என ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் கூறினார்.

“காலை 9.38 மணியளவில் பொதுமக்களிடமிருந்து  சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மெங்லெம்புவில் உள்ள கெலோம்பாங் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவத்தில், 65 வயது முதியவர் இறந்தார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 9B லிருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 3.50 மணி அளவில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததாகவும், விசாரணையில் அந்த நபரின் கால் சட்டையின் இடது பாக்கெட்டில் அடையாள அட்டை காணப்பட்டதாகவும் யஹாயா ஹாசன் கூறினார்.

“உடலைப் பரிசோதித்ததில் வலது கையில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன, ஆனால் குற்றவியல் கூறு எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இரண்டு வழக்குகளும் திடீர் மரணம் என வகைப் படுத்தப்பட்டு உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

– பெர்னாமா


Pengarang :