NATIONAL

ஸ்ரீ மூடாவில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை- 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், அக் 3- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா எண்டோரா
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று காலை நடைபெற்ற ஏஹ்சான்
ராஹ்மா மலிவு விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.

அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும்
இந்த திட்டத்தில் பங்கேற்பதற்காகக் காலை 7.00 மணி முதல் பொது மக்கள்
வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாக ஷா ஆலம் மாநகர் மன்ற
உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

இந்த விற்பனை காலை 10.00 மணிக்குதான் தொடங்கிய போதிலும்
மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாயப்பினை
நழுவ விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அதிகாலையிலே வந்து
விட்டதாக அவர் சொன்னார்.

இன்று இங்கு 300 கோழி, 400 பேக் 5 கிலோ அரிசி, 200 தட்டு முட்டை, 150
போத்தல் சமையல் எண்ணெய், கணவாய் ஆகிய பொருள்களோடு
மிளகாய் சாந்து, மிகூன் கோதுமை, சீனி போன்ற பொருள்களும்
விற்பனைக்கு வைக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இந்த விற்பனையில் அரிசி, கோழி, முட்டை போன்ற பொருள்கள்
பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதாகக் கூறிய அவர்,
பிற்பகல் 1.00 மணிக்கு முடிய வேண்டிய விற்பனை பொருள்கள் தீர்ந்து
விட்ட காரணத்தால் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது என்றார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் அரிசி 5
கிலோ 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :