செய்தி. சு.சுப்பையா
கிள்ளான்.டிச.1- KKI என்ற இந்திய சமுதாயத் தலைவர் பதவி சிலாங்கூர் மாநில அரசு அங்கீகரித்த பதவியில் முதன் முறையாக தேசிய முன்னணி சார்பில் இருவர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இப்பதவிகளுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் யார்-யார் நியமிக்கப்படுவார்கள் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள். அவர்களால் முன் மொழிய படுகின்றவர்களுக்கும் பதவி கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
கடந்த தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் அம்னோ சார்பில் 12 சட்ட மன்ற தொகுதிகளில் போட்டி நிலவியது.. அதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த 2 தொகுதிகளில் இந்திய சமூதாயத் தலைவர் யார் என்ற கேள்வி தற்போது சிலாங்கூர் மாநில அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
நேற்று கிள்ளானில் 62 இந்திய சமுதாயத் தலைவர்கள் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமை தாங்கினார். தேசிய முன்னணி 2 சட்ட மன்றங்களை பிரதிநிதிக்கும். இத்தொகுதியில் 3 இந்திய பிரதிநிதிகளை அம்னோ முன்மொழிந்துள்ளது என்று பாப்பாராயிடு தெரிவித்தார்.
அம்னோ முன் மொழிந்த மூவர் ம.இ.கா. பிரதிநிதிகளா என்ற கேள்வி எழுப்ப பட்டது. அம்மூவர் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரியாது என்று பாப்பாராயிடு பதில் அளித்தார்.
தேசிய முன்னணியில் இந்தியர் உறுப்பு கட்சியாக ம.இ.கா. இருக்கிறது. அதே வேளையில் தேசிய முன்னணி ஆதரவு மன்றத்தில் ஐ.பி.எப்., மக்கள் சக்தி கட்சிகள் இந்திய பிரதிநிதியாக இருக்கின்றன.
ம.இ.கா., ஐ.பி.எப்., மக்கள் சக்தி ஆகிய மூன்று கட்சிகளில் யார் அம்னோ கை வசம் இருக்கும் 2 சட்டமன்றங்களின் இந்திய சமுதாயத் தலைவர்களாக நியமிக்கப் படுவார்கள் என்ற கேள்வி சிலாங்கூர் மாநில இந்தியர்களிடம் பரவலாக எழுந்துள்ளது.