கோம்பாக், ஜன. 29 – உயர்தர தானியச் சோளத்தை பயிரிடுவதில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகச் சிலாங்கூர் அரசாங்கம் இதர மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
தானியச் சோள நடவுத் திட்டத்தில் அதிக செலவுகள் இல்லை என்பதால் இந்த நடவடிக்கை சாதகமான பலனைத் தரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.
நாங்கள் நிலப் பற்றாக்குறைப் பிரச்சனையை எதிர்நோக்குவதால் மற்ற மாநிலங்கள் அல்லது நிலம் உள்ள நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்கிறோம்.
எங்களிடம் உள்ள 300 ஏக்கர் நிலத்தில் மட்டுமே தானிய சோளத்தை நடவு செய்ய முடியும். ஆனால் இத்திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்ற நிலையிலான மக்கள் பரிவு தினம் மற்றும் தொழில் முனைவோர், கலாச்சார விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மற்ற மாநிலங்களுடன் இணைந்து தானிய சோளத்தை பயிரிடும் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் கோழி தீவனத்தின் விலை 20 சதவீதம் வரை குறையும். இதனால் கால்நடைப் பொருட்களின் விலையும் இறக்கம் காணும் என்றார் மேலும் தெரிவித்தார்.
தற்போது கிடைக்கக்கூடிய சூட்சமம் மற்றும் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் நாங்கள் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறோம். நடவு மற்றும் அறுவடைக்கு நாங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தாததால் செலவுகள் மிகவும் கட்டுப்படியான அளவில் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) மூலம் முந்தைய ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட உயர்தர தானிய சோளத்தின் முதல் பயிரீட்டின் மூலம் 118 டன் மகசூல் அறுவடை செய்யப்பட்டது.
கோல லங்காட் செலாத்தானில் உள்ள மொத்த 121 ஹெக்டர் பண்ணையில் ஒரு பகுதி அதாவது 16.9 ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயிரீட்டில் இந்த அறுவடை கிடைக்கப்பெற்றதாக அடிப்படை வசதி மற்றும் விவசாய மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.