SELANGOR

எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டாக்டர் குணராஜ் வாழ்த்து

கிள்ளான், ஜன 30- இன்று எஸ்.பி.எம். தேர்வை எழுதவிருக்கும்
மாணவர்களுக்குச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்
ஜோர்ஜ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த தேர்வை வாழ்க்கையின் அடுத்தக் கட்ட நகர்வுக்கான தொடக்கப்
புள்ளியாகக் கொண்டு சிறப்பான வெற்றியை அடைய தாம் வாழ்த்துவதாக
அவர் தெரிவித்தார்.

இவ்வளவு நாட்களாகப் பெற்றக் கல்வியை இந்த தேர்வில் முழுமையாகப்
பயன்படுத்தி கேள்விகளுக்குச் சரியான விடைகளை அளிக்கும்படி
மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நேர மேலாண்மை மற்றும்
கட்டொழுங்கு ஆகியவை வெற்றிக்கான திறவுகோலாக விளங்குகின்றன
என்று அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியில் எஸ்.பி.எம்.
தேர்வை எழுதும் மாணவர்கள் முன் உரையாற்றும் போது அவர் இவ்வாறு
கூறினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தீபாகரன் இந்த
நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகும் அதேவேளையில் இறைவனின்
ஆசியைப் பெறவும் தவறக்கூடாது எனக் கூறிய குணராஜ், எஸ்.பி.எம்.
தேர்வை எதிர்கொள்ளும் போது இறைவனை நமது துணையாக்கிக்
கொள்ள வேண்டும் என்றார்.

அதே சமயம், ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு மற்றும்
அர்ப்பணிப்பையும் நாம் இவ்வேளையில் மறந்து விடக்கூடாது.
அவர்களின் ஆதரவும் அரவணைப்பும் உங்களுக்கு எப்போதும்
உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்றார் அவர்.

உங்களின் தியாகங்களும் முயற்சிகளும் வெற்றி எனும் பரிசு மூலம்
கௌரவிக்கப்படும். உடல் நலம் காத்து முயற்சிகளைத் தொடருங்கள்.

உங்களின் சகல முயற்சிகளுக்கும் உரிய வெகுமதி காத்திருக்கும் என
அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :