NATIONAL

கூட்டரசு பிரதேச தினம் நாளை தொடங்கி ஞாயிறு வரை டத்தாரான் புத்ரா ஜெயாவில் அனுசரிக்கப்படும்

கோலாலம்பூர், ஜன 31- இவ்வாண்டிற்கான கூட்டரசு பிரதேச தினம் 2024
புத்ரா ஜெயா திறந்த நிலை தினத்துடன் இணைந்து டத்தாரான் புத்ரா
ஜெயாவில் நாளை தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை
நடைபெறும்.

புத்ரா ஜெயா கழகம் மற்றும் புத்ரா ஜெயா இலாகா ஆகிய துறைகளின்
கூட்டு முயற்சியில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர்
துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலிஹா முஸ்தாபா
கூறினார்.

வட்டார மக்கள் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு
ஏதுவாக ஒரே நிகழ்வில் அனைத்து அரசு துறைகளையும் ஒன்றுசேர்க்கும்
நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்வு 2024ஆம் ஆண்டு
கூட்டரசு தினம், கூட்டரசு பிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு,
மற்றும் கூட்டரசு பிரதேசக் கழகம் உருவாக்கம் கண்டு 28 ஆண்டுகள்
நிறைவு ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.

இந்த 2024 கூட்டரசு பிரதேச நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைத்து
மலேசியர்களையும் கேட்டுக் கொள்கிறோம். இங்கு புத்ரா ஜெயா கழகம்
மட்டுமின்றி, அனைத்து அமைச்சுகள், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள்,
தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் பொது நிறுவனங்கள் மற்றும்
சொத்துடைமைத் துறைகளும் இதில் பங்கேற்கவுள்ளன என்று அவர்
தெரிவித்தார்.

மேலும் இவ்விரு நிகழ்வுகளையொட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெர்னாமாவுக்கு அனுப்பிய அறிக்கை
ஒன்றில் அவர் சொன்னார்.

விலாயா மடாணி, ராக்யாட் ஹர்மோனி (நாகரீக பிரதேசம், நல்லிணக்க
மக்கள்) எனும் கருப்பொருளிலான இந்த 2024 கூட்டரசு பிரதேச தினத்தை
முன்னிட்டு 61 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.


Pengarang :