பேங்காக், பிப் 23 – மலேசிய சுற்றுப்பயணிகள் பயணம் செய்த சற்றுலா
பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம்
தாய்லாந்தின் மேற்கே உள்ள காஞ்சனாபுரி, போ பிலோல் மாவட்டத்தில்
நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் நிகழ்ந்தது.
நான்கு முதல் 70 வயது வரையிலான அந்த சுற்றுப்பயணிகள்
காஞ்சனாபுரியில் உள்ள சஃபாரி பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டு
திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த பேருந்தின் ஓட்டுநரும் இரண்டாவது ஓட்டுநரும்
காயங்களுக்குள்ளாயினர்.
அந்த பேருந்து லோரி ஒன்றை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை
இழந்து விபத்துக்குள்ளானதாக பயணிகளில் ஒருவரான ஹிஷாம் ரஹிம்
எனபவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவதற்காகச் சம்பவ
இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் வண்டி அனுப்பப்பட்டது. பின்னர்
நாங்கள் காஞ்சனாபுரியில் உள்ள போ போலேல் மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டோம் என்றார் அவர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஒரு பயணி மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளையில் எஞ்சிய 35 பயணிகளும்
வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று ஹோட்டலுக்குத் திரும்பினர்
அந்த சுற்றுப்பயணிகள் அனைவரு இம்மாதம் 21ஆம் தேதி தொடங்கி 24
ஆம் தேதி வரை தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தூதரக அலுவலக அதிகாரிகள் காஞ்சனாபுரிக்கு விரைந்ததாகத் தாய்லாந்துக்கான மலேசிய தூதர் டத்தோ
ஜோஜி சாமுவேல் கூறினார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் தேவையான
உதவிகளை இங்குள்ள தூதரகம் வழங்கும் என்றும் அவர் சொன்னார்.