புத்ராஜெயா மார்ச் 14 – மலேசிய டிஜிட்டல் வாகனமோட்டும் லைசென்ஸில்
(இ-எல்.எல்.எம்.) இடம் பெற்ற நபர் ஒருவரின் படம் அந்த லைசன்சில்
உள்ள நபருக்கு மாறாக வேறோருவரின் விபரங்களைக் கொண்டிருக்கும்
விவகாரத்திற்குக் கணினி முறை முறைகேடுகளோ அடையாளத் திருட்டோ
தொடர்பில்லை என்பதை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)
உறுதிப்படுத்தியுள்ளது.
மைஜேபிஜே முறையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகக்
கணினி முறை மீது வழக்கமான பராமரிப்பு பணிகளை தகவல்
தொழில்நுட்பக் குழு மேற்கொண்ட போது இந்த குழப்பம் நிகழ்ந்ததாக
ஜே.பி.ஜே. அறிக்கை ஒன்றில் கூறியது.
ஜே.பி.ஜே. இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளதோடு இந்த
குழப்பத்திற்காக மன்னிப்பும் கோருகிறது. தவற்றை சரி செய்வதற்கு
உடனடியாக அது நடவடிக்கை கொண்டுள்ளது. அனைத்து தகவல்களும்
பாதுகாப்பாக உள்ளன என்பதையும் அது உறுதி செய்ய விரும்புகிறது
என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
மக்களுக்கு மிகச்சிறப்பான டிஜிட்டல் சேவையை வழங்குவதற்கு ஏதுவாக
அதன் விநியோக முறையை தரம் உயர்த்துவதற்குத் தொடர்ந்தாற்போல
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த இலாகா உறுதியளித்தது.