கோலாலம்பூர், மே 31- மலேசியாவில் குறிப்பாக நாட்டின் பல விமான நிலையங்களில் உள்ள வசதிகளை உள்ளடக்கிய வர்த்தக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள பன்னாட்டு விரைவு போக்குவரத்து நிறுவனமான ஃபெட்எக்ஸ் கார்ப்ரேஷன் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்நிறுவனத்தின் விமான மற்றும் அனைத்துலகப் பிரிவின் தலைவரும் தலைமைச் செயல்முறை அதிகாரியுமான ரிச்சர்ட் ஸ்மித் நேற்று தம்மை புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் துறையில் மரியாதை நிமித்தம் சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, மடாணி பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமலாக்கம் செய்வது தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து நேர்மறையான கருத்தை தாம் பெற்றதாக அன்வார் சொன்னார்.
பரிந்துரைக்கப்பட்ட ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (ஜே.எஸ்-எஸ்.இ.இஸட்.) கூட்டு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதோடு அது உந்து சக்தியாகவும் ஆக்கப்பட வேண்டும் என ஃபெட்எக்ஸ் கருதுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து, மின்-வர்த்தகம் மற்றும் வர்த்தக சேவைகளில் பிரசித்தி பெற்று விளங்கும் ஃபெட்எக்ஸ் நிறுவனம் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.