கோலாலம்பூர், ஜூன் 12 – மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி.கேகன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
மலேசியா-அமெரிக்க இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களுடன் மக்கள் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தாங்கள் இச்சந்திப்பின் போது விவாதித்ததாக அன்வார் தனது முகநூல் பதிவில் கூறினார்.
பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பற்றி நாங்கள் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம். மேலும் விரிவான ஒத்துழைப்பை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க-மலேசியா பொருளாதார உறவுகள் வலுவாக இருப்பதாகவும் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து 15,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டில் செய்யப்பட்டுள்ளதாகவும் கெகன் முன்னதாகக் கூறியிருந்தார்.
மலேசியாவின் முக்கிய முதலீட்டாளராக அமெரிக்கா விளங்கி வருகிறது.