கோலாலம்பூர், ஜூன் 20 – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மத்திய அரசுக்கு அனுப்பிய சிறப்பு வாகனப் பதிவு எண் ஏல நிதியான 17 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி போக்குவரத்து அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
தீபகற்ப மற்றும் கிழக்கு மலேசியாவிற்கு இடையே பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கான விமானக் கட்டண உதவி, பி40 தரப்பினருக்கான மைலைசென்ஸ் திட்டம் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான கவசத் தொப்பி பரிமாற்றம் ஆகியவை அந்த முன்னெடுப்புகளில் அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
போக்குவரத்து அமைச்சின் சார்பாக, மேன்மை தங்கிய மாமன்னர் அவர்களால் அளிக்கப்பட்ட பங்களிப்பையும் மக்கள் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். “டவுலாட் துவாங்கு!” என்று இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் நிதி மக்களுக்கு உதவப் பயன்படுத்தப்படும் என்று பேரரசர் தனது முகநூல் பதிவில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
FFF 1 என்ற வாகன சிறப்பு பதிவு எண் சுல்தான் இப்ராஹிமுக்கு சென்றது. அவர் 17 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளிக்கு அந்த பதிவு எண்ணை ஏலத்தில் எடுத்தார்.