நண்பர்களுடன் மது அருந்திய போது நிகழ்ந்த விபரீதம்- ஆடவர் கத்தியால் குத்தப்பட்டு பலி

சண்டகான், ஜூலை 14- படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் சடலம்  சாகாலியுட்டில் உள்ள   செம்பனை தோட்டத் தொழிலாளர்களின் கொங்சி குடியிருப்பின் பின்புறம் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த 43 வயது ஆடவரின்  சடலத்தை  தோட்டத் தொழிலாளர்கள்   அதிகாலை 6.00 மணியளவில் கண்டுபிடித்ததாகக் கூறிய சண்டகான் மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ்.கே.ராமசாமி, அங்கு மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் அவ்வாடவரின் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகத்  தெரிவித்தார்.

பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவரான   பாதிக்கப்பட்ட நபர் மது அருந்துவதற்காக  கடந்த  புதன்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்கு  வந்ததுள்ளார்.  நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது  நண்பர் ஒருவரால் அவர்  கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என ராமசாமி சொன்னார்.

இச்சம்பவத்திற்குப் பின் வெளிநாட்டு ஆடவரான சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார்  என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின்  302வது பிரிவின்  கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர்  கூறினார்.


Pengarang :