NATIONAL

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளி, படங்கள் பகிர்வு- பொது மக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜூலை 15 – செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ.) பயன்படுத்தி
உருவாக்கப்படும் காணொளிகள் மற்றும் படங்களை பகிரும் புதிய
மோசடிக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி பொது மக்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேம்பாட்டிற்கு செயற்கை நுண்ணறிவு பெரிதும் துணை புரிந்த
போதிலும் சில தரப்பினர் அந்த தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி
வருவதாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

தாம் பேசுவது போன்ற வாட்ஸ்ஆப் காணொளி ஒன்று தமக்கு கிடைக்கப்
பெற்றதாகவும் எனினும் அது டீப்ஃபேக் எனும் போலிப் பதிவு என்றும்
டத்தோஸ்ரீ சித்தி நுர்ஹலிசா சில தினங்களுக்கு முன்னர் தனது
இண்ட்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

நல்ல காரியங்களுக்கும் தீய காரியங்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம்
பயன்படும். நமக்கு கிடைக்கும் காணொளிகள் குறித்து எச்சரிக்கையாக
இருக்கும் அதேவேளையில் அவை உண்மையானவையா அல்லது ஏ.ஐ.
செயலி மூலம் உருவாக்கப்பட்டவையா என்பதை ஆராய வேண்டும் என
அவர் கேட்டுக் கொண்டார்.

ஏ.ஐ- டீப்ஃபேக் முறையில் செய்யப்படும் மோசடிகள் தொடர்பில்
அதிகமான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளும்படி பெர்னாமா
மற்றும் ஆர்.டி.எம். ஆகிய ஊடகங்களை தாம் கேட்டுக் கொள்வதாக இன்று
இங்கு நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வின் போது அவர் குறிப்பிட்டார்.

லாபம் சம்பாதிப்பதற்காக தனது முகம் மற்றும் குரலை ஏ.ஐ. மூலம்
காப்பியடிக்கும் மோசடிக் கும்பலின் நடவடிக்கையை நாட்டின் முதல்
நிலை பாடகரான நுர்ஹலிசா அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தார்.

ஏ.ஐ. தளத்தின் அபாயம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து
விவாதிப்பதற்காக தாம் அடுத்த மாதம் சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடக
நடத்துநர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளதாக ஃபாஹ்மி தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப் சேவை மேட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால்
இந்த டீப்ஃபேக் மோசடியை அத்தரப்பினர் கட்டுப்படுத்துவர் எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :