கோலாலம்பூர், ஜூலை 20- விமான போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் நிர்வாக நடைமுறையில் பெரும் சிக்கலை ஏற்படுத்திய உலகளாவிய நிலையிலான தகவல் தொழில்நுட்ப இடையூறு பிரச்சினையை டிஜிட்டல் அமைச்சு அணுக்காக கண்காணித்து வருகிறது.
சேவையில் ஏற்பட்ட இடையூறு தொடர்பில் தாங்கள் பல புகார்களைப் பெற்றுள்ள வேளையில் அதனைச் சரி செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றில் தெரிவித்தார்.
மலேசியா உள்பட உலகம் முழுவதும் மைக்ரோசோப்ட் பயனீட்டில் ஏற்பட்ட இடையூறு காரணமாக முக்கியத் துறைகளான தொலைக்காட்சி , விமானம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டன என்று தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.
இந்த இணையச் இடையூறு பல நாடுகளில் விமான நிறுவனங்கள், வங்கிகள், ஊடகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேவையை பெரிதும் பாதித்துள்ளன என்று அனைத்துலக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலுள்ள உலக இணைய பாதுகாப்பு நிறுவனமான குளோபல் க்ராவுட்ஸ்ட்ரைக் ஹோல்டிங்ஸ் இன்க். நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த பாதிப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது