கோத்தா கினபாலு, ஆக 5- பயணிகள் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 600,000 வெள்ளி மதிப்புள்ள 20,393 கிராம் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை அரச மலேசிய சுங்கத்துறையின் சபா மண்டல அதிகாரிகள் கைப்பற்றினர்.
கடந்த மாதம் 30 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் தாவாவ் விமான நிலையத்திலும் பிற்பகல் 1.00 மணி அளவில் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுங்கத் துறையின் இயக்குனர் சித்தி மாங் கூறினார்.
இந்த போதைப் பொருளைக் கடத்தி வருவதற்கு கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 மற்றும் 29 வயதுடைய இரு உள்நாட்டு ஆடவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதிகாரிகளின் பார்வையில் இருந்து தப்புவதற்காக குவான் யின் வாங் எனும் பச்சை நிற பிளாஸ்டிக் பையில் பொட்டலம் இடப் பட்ட அந்த போதைப் பொருளை பயணிகள் விமானம் மூலம் கடத்துவது போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பாணியாகும் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39 பி பிரிவின் கீழ் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.