NATIONAL

தீ விபத்தில் 11 வயது பேத்தியுடன் கணவன்-மனைவி உயிரிழந்தனர்

மூவார், ஆகஸ்ட் 9: இன்று அதிகாலை ஜாலான் செகோலா, கம்போங் பாயா ரெடானில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 வயது பேத்தியுடன் கணவன்-மனைவி உயிரிழந்தனர்.

முகமட் நோர் முகமட் யாசின் (82) மற்றும் அவரது மனைவி ஆரா அப்துல் ஹமீட் (76) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அவர்களின் பேத்தி நோராத்ரியானா நோர் ஹிஸ்யாம், சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் (HPSF) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்கிலிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

அத் தம்பதியின் மற்றொரு பேரக்குழந்தையான நோராசிமா முகமட் ராதி (14), தலையில் காயம் ஏற்பட்டு இப்போது சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

“பாதி மரத்தாலும் கல்லாலும் கட்டப்பட்ட வீட்டில் தீ விபத்து அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்டது,” என்று ராயிஸ் முக்கிலிஸ் கூறினார்.

வீடு சுமார் 85 சதவிகிதம் நாசமாகியதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில், மூவார் மற்றும் பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து 21 உறுப்பினர்கள் அதிகாலை 2.25 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த செயல்பாட்டு தலைவர் முகமட் ஃபட்லி இஸ்மாயில் கூறினார்.

“மேலும், தீயை அணைக்கும் பணி அதிகாலை 4.24 மணிக்கு முடிவடைந்தது,” என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :