MEDIA STATEMENT

மனைவியை கத்தியால் குத்திய ஆடவர் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு  முயற்சி

ஜெம் போல், ஆக.  11-  கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய   32 வயது ஆடவர் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.   இச்சம்பவம்  பகாவ்வில் உள்ள ஒரு வீட்டில்  நேற்று காலை 10.00 மணி அளவில்  நிகழ்ந்தது.

முப்பது வயதுடைய  அப்பெண்ணை  கணவர் இடது பக்க  விலா எலும்பில்  இரு முறை கத்தியால் குத்தியதாக  ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட்  ஹூ சாங் ஹூக் கூறினார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் தற்போது கோல  பிலா, துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் இன்று வெளியிட்ட  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின்  இளைய சகோதரனிடமிருந்து  நேற்று காலை 9.30 மணியளவில்  தங்களுக்கு புகார் கிடைத்ததாக  ஹூ கூறினார்.

இதனிடையே,  ஜெலெபுவில் உள்ள டுரியன் பழத் தோட்டத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர் களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டது தொடர்பில் பிற்பகல் 2.30 மணியளவில் சந்தேக நபரின் சகோதரியிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அவ்வாடவர்   தற்போது ஜெம்போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

ஆபத்தான ஆயுதங்கள் அல்லது கருவிகளைப் பயன்படுத்தி பலத்த காயத்தை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்


Pengarang :