NATIONAL

சுக்மா போட்டியின் 11வது நாளில் சிலம்பம், டென்னில் போட்டிகளில் சிலாங்கூருக்கு மூன்று தங்கம்

ஷா ஆலம், ஆக. 22- சரவா மாநிலத்தில் நடைபெற்று வரும் 21வது சுக்மா
போட்டியில் சிலம்பம் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் சிலாங்கூர்
மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

மகளிர் தனிநபர் டென்னிஸ் போட்டியில் ஷரிபா எல்சா வான் அப்துல்
ரஹ்மான் பேராக் மாநிலத்தின் ஷிஹோமி லி ஷூவாங்கை தோற்கடித்து
சிலாங்கூருக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். இருபத்தோரு
வயதான ஷரிபா 6-1, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் ஷிஹோமியை வெற்றி
கண்டார்.

இதனிடையே, சிலம்பப் போட்டியின் ஆண்களுக்கான போரிடுதல் பிரிவில்
(55 கிலோவுக்கும் கீழ்) பி.லுத்ரபாலன் தங்கப் பதக்கம் வென்றார்.

கூச்சிங் ஹிக்மா எக்ஸ்சேஞ் இவெண்ட் மையத்தில் இன்று காலை 9.30
மணியளவில் நடைபெற்ற இப்போட்டியில் 17 வயதான லுத்ரபாலன் 27
புள்ளிகளைப் பெற்று சரவா மாநிலத்தின் அஷ்ராப் அக்கில் முகமது
ஜைனுரினை தோற்கடித்தார். அஷ்ராப்பிற்கு இப்போட்டியில் 16 புள்ளிகள்
கிடைத்தன.

காலை 10.30 மணியளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியின் போரிடுதல்
பிரிவில் (65-75 கிலோ) எம். மகேந்திரன் தங்கம் வென்றார். 17 வயதான
மகேந்திரன் 31 புள்ளிகளைப் பெற்ற வேளையில் அவரை எதிர்த்துப்
போட்டியிட்ட கே. கீதனுக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.


Pengarang :