NATIONAL

செம்பனை பதப்படுத்தும் இயந்திரத்தில் விழுந்து நபர் மரணம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22 – நேற்று ஜெஞ்சரோம், கோலா லங்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் செம்பனை பதப்படுத்தும் இயந்திரத்தில் விழுந்து 34 வயது நபர் உயிரிழந்தார்.

இரவு 9.15 மணியளவில் இச்சம்பவம் குறித்து தனது நிலையத்திற்கு தகவல் கிடைத்தது என கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அஹ்மட் ரிட்வான் முகமட் நோர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர், எட்டு நாட்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தார் என தொழிற்சாலை மேலாளர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் சக ஊழியர்கள் மதியம் 2.30 மணியளவில் ஓய்விலிருந்து திரும்பியபோது, குறிபிட்ட ஊழியரை காணவில்லை மற்றும் இயந்திரம் கவனிக்கப்படாமல் இயங்குவதைக் கண்டனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சகாக்கள் நடத்திய தேடுதலில், மாலை 5.57 மணியளவில் கன்வேயர் பெல்ட்டின் முடிவில் அத்தொழிற்சாலை ஊழியருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் காலணி, ஆடை துண்டுகள் மற்றும் மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று ரிட்வான் கூறினார்.

“இந்த சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை மற்றும் காவல்துறையினர் இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர்,” என்று அவர் கூறினார்,

அந்த மனித எச்சங்கள் பந்திங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

– பெர்னாமா


Pengarang :