ஷா ஆலம், மே 12:
மத்திய அரசாங்கம் இளையோரிடையே நிலவும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் துணை இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் ஹஃபிப் பஹாருடின் கூறினார். அரசாங்கம் தொடர்ந்து அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப்படும் சூழ்நிலையை நிறுத்த வேண்டும். மேலும் உள்நாட்டவரை வேலைக்கு அமர்த்தும் கட்டளையை எல்லா நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும்.
தொடர்ந்து பேசுகையில், அரசாங்கம் இளம் தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் உள்ள சிறுகடனுதவி திட்டங்கள் அறிமுகப்படுத்த முயல வேண்டும் என்றார். இளையோர் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு அளித்து வணிகத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, இளையோரின் வேலையின்மை பிரச்சனையை களைய வேலை வாய்ப்பு வழிகாட்டிகள் ஏற்படுத்த வேண்டும். இளையோரிடையே நிலவும் வேலையின்மை பிரச்சனையை 10.5% ஆக இருந்து வருகிறது என்றும் 273,400 இளையோர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். அதில் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 2016-இல் மொத்த உள்நாட்டு தொழிலாளர் சக்தியில் 17.8% ஆகும். டாக்டர் ஹஃபிப் மேலும் கூறுகையில், இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு உலக பொருளாதார வீழ்ச்சியும், தேசிய முன்னணி அரசாங்கத்தின் தோல்வியும் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் சக்தியில்லாத, பிரச்சனைகளைக் கொண்டிருக்கும் நாட்டின் பிரதமர் ஆகியவையே ஆகும் என்றார்.