கோலா லம்பூர், செப்டம்பர் 10:
கோலா லம்பூர் மாநகரம் இன்று 5000 மேற்பட்ட ஊதா நிறத்திலான உடைகள் அணிந்த மகளிர் நிறைந்து காணப்பட்டது. இவர்கள் ‘ மகளிர் தீய அரசியலை எதிர்ப்போம் ‘ என்ற பேரணியில் கலந்து கொண்டனர். துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் அமைந்துள்ள மாஜூ ஜங்ஷன் கட்டிடத்தில் முன் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்த பேரணியை அரசு சார்பற்ற இயக்கங்கள் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நான்காவது பிரதமரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா அலி தலைமையேற்ற பேரணியில் பல அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர்கள் பேசினார்கள். பேரணியில் உரையாற்றிய சித்தி ஹாஸ்மா மகளிர் வன்முறை அரசியல், ஊழல் மற்றும் பொறுப்பற்ற அரசியலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.
” மகளிரை போரில் கொடூரமான முறையில் கொலை செய்யப் படுவதும் காமப்பசிக்கு ஆளாகும் நிலையை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கிறோம். இது நடக்க காரணம் தீய அரசியல் நடைமுறையே ஆகும். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை எதிர்க்க பேரணியில் கலந்து கொண்டோம். மகளிர் அமைதியை விரும்புகிறோம்,” என்று பேசினார். இவரின் உரைக்கு பிறகு சோகோவிற்கு நடந்தனர்.
பல அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர்கள் இடையே கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், டத்தின் ஸ்ரீ ஷம்சிடார் தஹாரின், சிலாங்கூர் சட்ட மன்ற சபாநாயகர் ஹான்னா இயோ, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி, பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில், ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பேய் நீ, கெஅடிலான் மகளிர் தலைவர் ஜூரைடா கமாரூடின் மற்றும் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகளிர் தலைவர்களை தவிர்த்து, பேரணியில் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் கெஅடிலான் உதவித் தலைவர் தியான் சுவா ஆகியோரும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்