காஜாங், ஆகஸ்ட் 27:
காஜாங் நகராண்மை கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சட்ட விரோதமாக செயல்படும் வட்டி முதலைகளின் பதாகைகளை மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை வட்டி முதலைகளை முற்றாக துடைத்தொழிக்க வழி வகுக்கும் என்று காஜாங் நகராண்மை கழகத்தின் தலைவர் முகமட் சாயூதி பாக்கார் கூறினார். காஜாங் மாவட்ட காவல்துறையின் குற்றவியல் விசாரணை பிரிவின் ஒத்துழைப்போடு சட்ட விரோத வட்டி முதலைகளையும் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
” வட்டி முதலைகளின் பதாகைகளை மற்றும் விளம்பரங்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கை ஆகஸ்ட் மத்தியில் ஆரம்பிக்கப் பட்டது,” என்று காஜாங் நகராண்மை கழகத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு பிறகு சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
சாயுதி மேலும் கூறுகையில், இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் வட்டி முதலைகள் நடவடிக்கைகளை முறியடிக்கும் என்று கூறினார். விளம்பர பதாகைகளில் காணப்படும் தொலைபேசி எண்ணை மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையத்திடம் அனுப்பி முடக்கி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
#கேஜிஎஸ்