கோலாலபூர், ஜூன் 24-
நாட்டின் கடனுக்கு தீர்வு காண்பதில் உறுதிபூண்டுள்ள துன் டாக்டர் மகாதீர் மூன்றாண்டுகளுக்கு மேல் பிரதமர் பொறுப்பில் இருக்க தாம் உத்தேசிக்கவில்லை என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மொத்த வருமானத்தில் 80 விழுக்காடாக உள்ள நாட்டின் கடனை 54 விழுக்காடாக குறைப்பதற்கு மூன்றாண்டுகள் தேவை என்று சி என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மகாதீர் கூறினார்.
அந்த இலக்கு அடைந்த பின்னரும் பிரதமர் பதவியில் நீடிக்கும் சாத்தியம் பற்றி அந்தச் செய்தி வாசிப்பாளர் கேட்டதற்கு “இல்லை, நான் மூன்றாண்டுகளுக்கு மேல் அப்பதவியில் இருக்க மாட்டேன்” என்று அவர் பதிலளித்தார்.
“மாறாக, பதவியைத் துறந்த பின்னரும் நாட்டின் கடனை அடைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பேன்” என்றார் அவர்.