ஷா ஆலம், நவம்பர் 5:
செந்தோசா சட்ட மன்றத்தில் ஒரு சந்தை வளாகத்தை நிறுவ மாநில அரசாங்கத்திடம் கோரிக்கையை இன்று சிலாங்கூர் மாநில சட்ட மன்ற கூட்டத்தில் செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் முன் வைத்தார். இதன் மூலம் செந்தோசா வியாபாரிகள் தங்களது வணிகத்தை சீராக செய்ய முடியும் என சட்ட மன்ற கூட்டத்தில் தனது 2020 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்தை வளாகம் ஊராட்சி மன்றத்திற்கு வருவாயை அதிகரிக்க வகை செய்யும் என்று குணராஜ் கூறினார்.
” செந்தோசா சட்ட மன்றம் எங்களது தொகுதியில் ஒரு சந்தை வளாகத்தை நிறுவ மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரியிடம் கோரிக்கை விடுக்கிறோம். இந்த வளாகத்தின் வழி வணிக நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். வணிக உரிமம், சுகாதாரம் மற்றும் பல்வேறு ஊராட்சி மன்ற நடவடிக்கைகள் சீராக இருக்க வழி வகுக்கும்,” என்று அவர் உரையாற்றினார்.