கோலாலம்பூர், டிச.30-
நாட்டின் நிர்வாகத்தை 2018 மே மாதம் கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் மக்களின் சமூக பொருளாதார தரம் மற்றும் வளப்பத்தின் கவனம் செலுத்தும் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் அதிக கவனத்தை ஈர்த்தது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தொடக்கி வைத்த கூட்டு வளப்பத்தை நோக்கி 2030 திட்டமாகும். 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அதன் வளப்பத்தினால் அனைத்து மக்களும் பயனடையச் செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அதன் நோக்கமாகும்.
பொருளாதாரம் வளர்ச்சியானது அனைத்து மக்களையும் குறிப்பாக குடியிருப்பு பகுதி, வட்டாரம், வருமானப் பிரிவு, இனம், என்ற அனைத்து பிரிவையும் சேர்ந்தவர்களும் பயனடையும் வகையில் பகிர்ந்தளிப்பது மீது இத்தூர நோக்குத் திட்டம் கவனம் செலுத்தும்.
ஏழு வியூகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் இது.
தேசிய தொழில்துறை மற்றும் வர்த்தக சுற்றுச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் மறு வடிவமைத்தல், அதிக வளர்ச்சியைப் பதிவு செய்யக்கூடிய புதிய துறைகளில் வியூக முதலீடு செய்தல், நாட்டின் ஆள் பலத்தின் ஆற்றலை மேம்படுத்தி புதுப்பித்தல், தொழிலாளர் சந்தை மற்றும் தொழிலாளர்கள் வருமானத்தை சீரமைத்தல், சமூக வளப்பத்தை வலுப்படுத்துதல், அனைத்து வட்டாரங்களையும் உட்படுத்திய மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமுதாய சமூக மூலதனத்தை அதிகரித்தில் ஆகியன அந்த ஏழு வியூகங்களாகும்.