NATIONAL

அஸ்மின்: சிலாங்கூர் சட்ட மன்ற தொகுதி பங்கீடுகள் சுமூகமாக நடந்துக் கொண்டிருக்கிறது !!!

டெங்கில், பிப்ரவரி 27:

எதிர் வரும் 14-வது பொது தேர்தலையொட்டி, சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீட்டில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே சுமூகமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது என சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிட தொடர்ந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வருகிறது என்றார் .

”  சிலாங்கூர் மாநில பாக்காத்தான் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் கூடிய விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.எந்த ஒரு முடிவும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் சம்பந்தப் பட்ட தொகுதி மக்களின் தேவைகள் அடிப்படையில் எடுக்கப்படும். இது மக்களாட்சி நடைமுறை, ஆக தொகுதி பங்கீட்டில் வாக்காளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எதிர் பார்க்கும் வெற்றி பெற முடியும். தொகுதி பங்கீடு பற்றி பேசும் போது ‘யாருக்கு என்ன கிடைக்கும்’ என்று முக்கியம் அல்ல. மாறாக வெற்றி பெறக் கூடிய கட்சிக்கு வழி விடுவதே சிறந்த நடைமுறை ஆகும். இந்த சிந்தனையை தான் சிலாங்கூரில் அமல்படுத்த  விரும்புகிறோம்,” என்று செமிஞ்சே 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார் .


Pengarang :