கோலா சிலாங்கூர், ஜனவரி 3:
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சேவை துறையின் ஒத்துழைப்புடன் கோலாசிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகேஎஸ்), டேவான் ஸ்ரீ சியந்தானில் வரும் ஜனவரி 26ஆம் தேதி உணவு தயாரிப்பு மீதான பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளது.
இப்பயிற்சியில் முதல் கட்டமாக, உணவகம் மற்றும் இரவு சந்தை வணிகர்கள் உணவு தயாரிக்கும் போது சுத்தத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படும்.
ஊராட்சி மன்ற அமலாக்கப் பிரிவு மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைக்களுக்கு ஏற்ப இந்த பயிற்சி அமைந்துள்ளதால், அனைத்து உணவக நடத்துநர்களும் இப்பயிற்சியில் பங்கேற்பது அவசியம் என்றும் எம்டிகேஎஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு பங்கேற்பாளரும் 50 வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இது குறித்து மேலும் விவரங்களை அறிய விரும்பும் பொது மக்கள், 03-32812235 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.