கிள்ளான், ஜன.31:
சமயம் மற்றும் இனம் குறித்து பரவி வரும் போலியான செய்திகள் குறித்து செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ், இது போன்ற குறிப்பாக மலாய் இனம், இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து அதிகமான வதந்திகள் பரவி வருவதாக தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு கூறினார்.
“இந்த இணைய யுகத்தில் இனத்துவேசமான பொய்ச் செய்திகள் வெகு விரைவாக பரவி வருகின்றன. சிலவேளைகளில், இந்த செய்திகளை மறுப்பதில் கால தாமதமாகிறது.”
மக்களுக்கு உண்மையான தகவல் கிடைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அதேவேளையில், இஸ்லாம், மலாய் இனம் மற்றும் ஆட்சியாளர்களின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் சாபு தெரிவித்தார்.