கங்கார், ஆக.20-
பொது பல்கலைக்கழகங்களில் செப்டம்பர் மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டில் உயர்க்கல்வி பட்டப்படிப்பு பயிலவிருக்கும் 20,716 மாணவர்களுக்கான முன் கட்டண உதவிக்காக தேசிய உயர்க்கல்வி கடனுதவி கழகம் (பிடிபிடிஎன்) 31 மில்லியன் வெள்ளி மதிப்பிலான காசோலைகளை வெளியிட்டுள்ளது.
உயர்க்கல்வியைத் தொடர்வதற்கு எந்தவொரு மாணவருக்கும் நிதிபற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காகவே இந்த முன்கட்டண நிதியுதவி வழங்கப்படுவதாக பிடிபிடிஎன் நிர்வாகி வான் சைஃபுல் வான் ஜுன் தெரிவித்தார்.
ஐபியு இணையத் தளம் மூலம் உயர்க்கல்வி கழகங்களுக்கு விண்ணப்பம் செய்த வேளையில் பிடிபிடிஎன் திட்டத்தில் பதிந்து கொண்ட மலேசிய மாணவர்கள் அனைவருக்கும் தலா 1,500 மதிப்பிலான காசோலை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் பிஎஸ்எச் எனும் வாழ்க்கைச் செலவின உதவித் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது இதன் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்று வான் சைஃபுல் விளக்கமளித்தார்.