கோலாலம்பூர், ஆக.22-
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஆசிய வியூக மற்றும் தலைமைத்துவ கழகம் (அஸ்லி) பிரதமரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவிற்கு ‘தேசத் தாய்’ எனும் விருதை வழங்கி கௌரவித்தது.
நாட்டை மேம்படுத்தும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி வரும் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் அர்ப்பணிப்புகளை அங்கீகரிக்கவே இவ்விருது வழங்கப்படுவதாக அஸ்லியின் தலைவரும் ஜெஃப்ரி சியா அறவாரியத்தின் தோற்றுநருமான டான்ஸ்ரீ ஜெப்ரி சியா தெரிவித்தார்.
“பல்லின கலாச்சாரம், இனம் மற்றும் சமயங்களைக் கொண்ட ஒரு நாட்டில் நமக்கெல்லாம் ஒரு முன்னோடியாகவும் ஊக்குவிப்பாகவும் டாக்டர் சித்தி ஹஸ்மா திகழ்கிறார்” என்றார் ஜெப்ரி சியா.
உண்மையான ஒரு தலைமைத்துவத்திற்குத் தேவையான அன்பையும் பண்பையும் கொண்டிருக்கும் சித்தி ஹஸ்மா, நாட்டின் முதலாவது மலாய் பெண் மருத்துவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்று ஜெஃப்ரி புகழாரம் சூட்டினார்.