சுபாங், ஆக.22-
மக்கள் மத்தியில் ஒருமைப்பாடும் அமைதியும் நிலைத்திருப்பதற்கு செய்தி ஊடகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஆக்கப்பூர்வமான செய்திகளை வெளியிடுவதிலும் உண்மையான, பிறர் உணர்வுகளைப் பாதிக்காத, பல்வேறு சமய, இன தொடர்பான செய்திகள் மற்றும் பொருளாதார கோணத்திலான செய்திகளையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நாடு குறிப்பாக சிலாங்கூரின் பொருளாதார மேம்பாடு குறித்து விளம்பரப்படுத்துவதில் அச்சு, மின்னியல் மற்றும் இணைய ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் பாராட்டினார்.
“மலேசியாவை ஒரு வளமிக்க நாடாக மேம்படுத்துவதில் நம் அனைவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. எனவே, மாநில அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்வது அவசியம்” என்றார் அவர்.