ஷா ஆலம், ஆக.23-
மாநிலம் முழுவதிலும் ஆறுகளை உட்படுத்தும் சுற்றுச் சூழல் தூய்மைக்கேடு விவகாரத்தில் மாநில அரசு விட்டுக்கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்கள் அல்லது ரசாயன கழிவுகளை ஆற்றில் போடக் கூடாது என அவற்றின் நடத்துநர்களுக்கு தமது தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், பயனீட்டாளர் விவகாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.
“இந்த விவகாரத்தை மாநில அரசு கடுமையாகக் கருதுவதோடு இதில் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது. ரசாயனக் கழிவுப் பொருட்களை ஆற்றில் கொட்டி தண்ணீரை அசுத்தப்படுத்துவதோடு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையையும் அரசு இனி பொறுத்துக் கொள்ளாது” என்றார்.
“இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது” என்றும் அவர் சொன்னார்.