ஷா ஆலம், ஆக.23-
ஜப்பானைச் சேர்ந்த தோஹோகு பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் பேரிடர் அபாயம் குறித்த அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. இதில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது ஏற்படும் பாதிப்புகளை அறிவியல் ரீதியாக குறைப்பது குறித்த விளக்கங்களும் அடங்கும்.
இயற்கைப் பேரிடர் அபாயம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ளும் பொருட்டு மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளுக்கு இப்புத்தகத்தின் 2,000 பிரதிகள் விநியோகிப்படும் என்றும் பின்னர் அவை பொது மக்களுக்கும் விநியோகிக்கப்படும் என்றும் சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், பயனீட்டாளர் விவகாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.
இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் இயற்கைப் பேரிடர்களின் அபாயத்தை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்வதோடு அவற்றின் தாக்கத்திற்குத் தயாராகுவது குறித்தும் தெரிந்து கொள்வர் என்றார் அவர்.
நாட்டில் முதன் முறையாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் ஊராட்சி மன்றங்களும் சமுதாயத் தலைவர்களும் பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.