ஷா ஆலம், ஆக.26-
மாநிலத்தில் உள்ள இஸ்லாம் அல்லாத இதர சமய வழிபாட்டு தலங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் உயர்க்கல்வி கழகங்களுக்கான கட்டண உதவிக்காகவும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் 303,000 வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதியில் மாநிலம் முழுவதிலும் உள்ள 30 ஆலயங்களுக்காக 210, 000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் பரிவுமிக்க அரசாங்கத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் கூறினார்..
எஞ்சிய 93 ஆயிரம் வெள்ளி பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் தோட்டத் தொழிலாளர்களின் 19 பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்காக வழங்கப்படுகிறது என்றார்.
பிள்ளைகளின் உயர்க்கல்விக்காக சிரமப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சுமையைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வி கேள்விகளில் முழு கவனத்தை செலுத்துவதற்கும் உதவுவதே இந்த நிதியின் நோக்கமாகும் என்று கணபதிராவ் விளக்கமளித்தார்.
அதேவேளையில், மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளி வாசல்களின் நலனில் மட்டுமல்லாது இதர சமயங்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் சங்கங்களின் செயல்பாட்டையும் நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதிலும் மாநில அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை இந்நிதி ஒதுக்கீடு காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.