ஷா ஆலம் , ஆகஸ்ட் 27:
பல்வேறு வியாபர நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட விரோத அந்நிய நாட்டவர்களுக்கு அரசாங்க அதிகாரிகள் அதிக ‘இடம்’ கொடுத்து விட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். அதிகமாக ‘இடம்’ கொடுத்து விட்டதால் உள்நாட்டு வியாபாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக தற்போது உருவெடுத்து விட்டது என்று விவரித்தார்.
” நாம் மிக எளிதாக எடுத்துக் கொண்டோம், செலாயாங் மொத்த சந்தையை பாருங்கள். முதலில் மீன்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே விற்பனை செய்தார்கள், ஆனால் தற்போது மொத்த சந்தையை தன் வசம் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மளிகை கடை வியாபாரமும் அச்சே இனத்தவரிடம் சென்று கொண்டிருக்கிறது,” என ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற 2020 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் சட்ட திட்டத்தில் வெளிநாட்டவர்கள் எந்த ஒரு வியாபாரமும் செய்யக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும் அவர்கள் தைரியமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கை எதிர் கொள்வது மிகக் கடினமான ஒன்றாகும், ஏனெனில் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு அமலாக்க நடவடிக்கை எடுக்காதது ஆகும் என்று அமிரூடின் விவரித்தார்.