ஷா ஆலம், செப்.11-
மாநிலத்தில் புகைமூட்டம் மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக திறந்த வெளி எரிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் சிலாங்கூர் சுற்றுச் இலாகா (ஜேஏஎஸ்) ஈடுபட்டுள்ளது.
மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தீச்சம்பவங்கள் நடைபெறுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள காட்டுப் பகுதிகளில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவ்விலாகாவின் இயக்குநர் ஷாஃபி யாசின் கூறினார்.
“அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளி எரிப்புச் சம்பவங்கள் நடைபெறும் ஜோஹான் செத்தியா, கிள்ளான் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது” என்றார் அவர்.
“ஆயினும், நேற்று மாலை 5.40 மணி வரையில் எந்தவொரு பகுதியிலும் தீ அல்லது புகை காணப்படாவிட்டாலும், ஜோஹான் செத்தியா பகுதியில் புகைமூட்டம் மோசமாக இருந்தது” என்றும் அவர் சொன்னார்.