புத்ராஜெயா, அக்.4-
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் கூட்டரசு நிர்வாக பணியாளர்களுக்கு நேர்மை மற்றும் ஆளுமை விருதுடன் 30 ஆயிரம் வெள்ளி வரையிலான வெகுமதியும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
முறைகேடு குறித்து பெறப்படும் புகார்கள் யாவும் கருவூல தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அகமது பத்ரி முகமது ஜாஹிர் தலைமையிலான உயர்நிலை செயற்குழு ஆராயும் என்றார் அவர்.
“இது நிதியமைச்சின் பணியாளர்களுக்கு மட்டுமின்றி தங்கள் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணையும் அனைத்து நிர்வாக பணியாளர்களுக்கும் அளிக்கப்படும் வாய்ப்பு” என்றார்..
அரசு துறைகளில் நிதி முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து செயல்திறன், பொறுப்பேற்பு மற்றும் வெளிப்படத்தன்மை ஆகிய கொள்கை அடிப்படையில் சேவைகள் அமைந்திடுவதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் கடப்பாட்டிற்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைவதாக லிம் தெரிவித்தார்.