கோலா லம்பூர், நவம்பர் 27:
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் அஸ்தி, மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலமான சின் பெங்கின் அஸ்தி மலேசியாவுக்கு கொண்டு வரப்படக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சின் பெங்கின் அஸ்தி அவரின் சொந்த ஊரான பேரா, சித்தியாவனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்த அஸ்தியை நிர்வகித்த குழு தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து எல்லை வழியாக , சின் பெங்கின் அஸ்தி மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி லுமூட் கடலில் தூவப்பட்ட வேளையில் எஞ்சிய அஸ்தி, தித்திவங்சா மலைத் தொடரில் உள்ள காட்டுப் பகுதியில் தூவப்பட்டதாக அந்த குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் சான் காக் பூக் தெரிவித்தார். அதேவேளையில் சின் பெங்கிற்காக ஒரு நினைவஞ்சலி கூட்டமும் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
1924 ஆம் ஆண்டில் சித்தியாவனில் பிறந்த சின் பெங்கின் இயற்பெயர் ஓங் பூன் ஹூவா. 1989 ஆம் ஆண்டில் ஹாட் யாய் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் , சின் பெங் தாய்லாந்து குடியுரிமைப் பெற்று அங்கே வசிக்கத் தொடங்கினார்.