செலாயாங், நவ.29-
செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) நேற்று முன்தினம் மேற்கொண்ட பொழுது போக்கு மையங்கள் மீதான அமலாக்க சோதனை நடவடிக்கையின் போது முறையான அனுமதி இன்றி நடத்தப்பட்டு வந்த உல்லாச பொழுது மற்றும் ஸ்னூக்கர் மையம் ஒன்றை பறிமுதல் செய்தது.
இரவு 9மணிக்கு 60 அமலாக்க அதிகாரிகள் பங்கேற்ற இந்நடவடிக்கைக்கு தாம் தலைமையேற்றதாக எம்பிஎஸ் தலைவர் ஷம்சுல் ஷாஹ்ரில் பட்லிஷா கூறினார்.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது முதலில் கெப்போங், தாமான் கேஐபி தொழில்துறை பகுதி பொழுது போக்கு மையம் மீதிலும் அதனை அடுத்து ரவாங் வால்கில் உள்ள ஸ்னூக்கர் மையத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்நடவடிக்கையின்போது 54 மேசைகள், 77 நாற்காலிகள், ஓர் ஆடியோ சாதனம், இரு தொலைக்காட்சி பெட்டிகள், 400 ஸ்னூக்கர் பந்துகள் மற்றும் நான்கு இணையம் வாயிலான டார்ட் சாதனங்கள் உட்பட மேலும் பல சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர். இப்பறிமுதல் நடவடிக்கையானது, 1995ஆம் ஆண்டு பொழுதுபோக்கு சட்டம் மற்றும் பொழுது போக்கு மையம் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.