ஷா ஆலம், டிச.4-
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் தயாரிப்புத் துறையில் 16.4 பில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூர் பதிவு செய்துள்ளது. மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (மிடா) அறிவித்துள்ள இந்தத் தொகையானது மாநில அரசாங்கத்தின் இலக்கான 10 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மேலும் இந்த அடைவுநிலையானது மூன்றாம் காலாண்டு வரையில் இதர மாநிலங்கள் அனைத்தையும் முந்திக் கொண்டு சிலாங்கூர் முன்னணி வகிக்க வைத்துள்ளது என்று அவர் சொன்னார்.
“கடந்த ஆண்டில், உலக பொருளாதார மந்த நிலை மற்றும் சீனா- அமெரிக்க வர்த்தகப் போருக்கு மத்தியில் 30ஆண்டு கால வரலாறு காணாத வகையில் 18.9 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை சிலாங்கூர் கவர்ந்தது” என்றார் அவர்.
‘இது சிலாங்கூர் அரசாங்கத்தின் அரசியல் நிலைத்தன்மை, நிர்வாகம், முதலீட்டாளர் நட்புறவு கொள்கை ஆகியவற்றினாலும் உயர்தரமிக்க அடிப்படை வசதிகள் போன்றவை அந்நிய முதலீட்டாளர்களைக் கவர்ந்ததனாலும் அடையப் பெற்ற வெற்றி என்பது நிரூபனமாகிறது’ என்றார் அவர்.