ஆயர் கெரோ, டிச.6-
2020 வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட #மலேசியாவேலை வியூகத்திற்கு ஏற்ப அடுத்த ஐந்தாண்டுகளில் அந்நிய நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அல்லது 500,000 குறைப்பது குறித்து மத்திய அரசாங்கம் கொள்கை வரைவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதோடு தொழில்நுட்ப பயனீடு மூலம் அந்நிய நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடப்பாடு கொண்டிருப்பது அவசியம் என்று கெஅடிலான் இளைஞர் அணி தலைவர் அக்மல் நஸ்ருல்லா முகமது நஸிர் கூறினார்.
முந்தைய அரசாங்கத்தின் நிர்வாகமானது மலேசியாவில் அந்நிய நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையானது நாட்டின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் அதிக பட்சம் 15 விழுக்காடு என்று நிர்ணயம் செய்திருந்தது. இதன்படி 2.3 மில்லியன் முதல் 2.4 மில்லியன் அந்நிய தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட்டனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வரையறையின் படி நாட்டில் உள்ள அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால். உள்நாட்டு மக்களில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர் என்றார் அவர். எனவே, இந்த 15 விழுக்காடு என்ற வரையறை அடுத்த 5 ஆண்டு கால கட்டத்தில் 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அவர் முன் வைத்தார்.