ஷா ஆலாம், ஜனவரி 10:
சிலாங்கூர் மக்களைப் பாதிக்கும் மூன்று முக்கிய விவகாரங்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் வளமான மற்றும் சுபிட்சமான வாழ்க்கையை உறுதிப்படுத்த சிலாங்கூர் மாநிலம் எதிர்நோக்கி வரும் மற்ற பிரச்னைகளுக்கும் அவசியம் தீர்வு காண வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“சமயம், இனம் மற்றும் சுற்றுச் சூழல் பிரச்னை மாநில மக்களைத் தொடர்ந்து பாதித்து வருகிறது” என்றார் மந்திரி பெசார்.
“ 2020 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வியூகத்திற்கு ஏற்ப இப்பிரச்னைகளுக்கு இவ்வாண்டும் வரும் ஆண்டுகளிலும் தீர்வு காணப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று 2020 புத்தாண்டையொட்டி காணொளி வழி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
இம்மாநிலத்தில் உள்ள பல்லின மக்களின் ஐக்கியத்திற்கு அப்பால் சீரிய நிர்வாகத்தின் வழி சிலாங்கூர் கடந்தாண்டு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதை அமிருடின் சுட்டிக் காட்டினார்.
“இலக்கு வகுக்கப்பட்ட 16.4 பில்லியன் வெள்ளி முதலீட்டை வெற்றிகரமாகக் கவர்ந்தோம். உண்மையான இலக்கு 10 பில்லியன் வெள்ளியாகும்”
இதைத் தவிர்த்து, மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சில துறைகள் மற்றும் இலாகாக்கள் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதோடு சிலாங்கூரை நாட்டின் முதலாவது மாநிலம் என்ற அந்தஸ்துக்கும் இட்டுச் சென்றுள்ளது.மக்களின் கூட்டு வளப்பத்திற்காக பெடுலி செஹாட் உட்பட பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை மாநில அரசாங்கம் மீண்டும் தொடரும் என்றார்.
2025 ஆம் ஆண்டுவாக்கில் விவேக மாநில அந்தஸ்தை அடையும் வகையில் 2020 சிலாங்கூர் வரவு செலவு திட்டத்தில் ஐந்து முக்கிய வியூகங்களை தமது தரப்பு வரைந்துள்ளதாக அவர் விவரித்தார்.