ஷா ஆலம், ஜன.20-
2020 சிலாங்கூர் மாநில அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை மாட்சிமைத் தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா நிறைவு செய்வார். இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி முதல் தேதி பெட்டாகிங் ஜெயா சதுக்கத்தில் நடைபெறும்.
“சுமார் 12 ஆயிரம் பேர் திரளவர் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி நாட்டில் உள்ள பல்வேறு இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது” என்று முதலீட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
“இந்தத் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியானது மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும்” என்று இன்வெஸ் சிலாங்கூர் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியின் போது பல்வேறு கலாச்சார , சிங்க நடனங்கள், 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு அங் பாவ் வழங்குதல் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் 28 உணவு அங்காடி உரிமையாளர்கள் நிதி உதவி போன்ற அங்கங்கள் நடைபெறவிருப்பதாக அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிடத்தில் 30 நிமிட இடைவெளியில் 20 இலவச பேருந்து சேவையை பிஜே சிட்டி பேருந்து வழங்கவிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொது மக்களின் வசதிக்காக 3,709 கார் நிறுத்துமிடங்களும் தயார் செய்யப்படவிருப்பதாக அவர் கூறினார்.